தும்மல் சகுனம் |
தும்மினால் ஆயுசு நூறு!
உண்மைதாங்க, தும்மினால் “ஆயுசு நூறு’ என்று பெரியவர்கள் சொல்வது ஏதோ பழக்க தோஷத்தாலோ மூட நம்பிக்கையாலோ அல்ல. அதில் அறிவியல் உண்மையும் உண்டு.
உண்மையில் தும்மல் என்பது ஒரு எச்சரிக்கை. “உங்க உடலுக்குள் தேவையற்ற அந்நிய பொருள் தூசு, தும்பு, கிபருமிகள் நுழையப் போகின்றன. இதனால் உடலுக்குக் கெடுதல்’ என்பதை உங்களுக்கு எச்சரிப்பதுதான் தும்மல். இன்னொரு வகையில் சளி, ஜலதோஷம், சைனஸ், வைரஸ் தொற்று ஆகியவை வரப்போகின்றன என்பதற்கான அறிகுறியும் அதுதான். “இதிலிருந்து உங்கள் உடலைக் காத்துக் கொண்டால் நீங்கள் நூறாண்டு வாழலாம்!’ என்ற உண்மையைத்தான் அவர்கள் அப்படி சொல்லி வைத்திருக்கிறார்கள்.
சிலருக்கு காலையில் எழுந்ததும் விடாமல் தும்மல் வரும், 10, 15 முறை கூட தொடர்ந்து தும்முவார்கள். இன்னும் சிலருக்கு தும்மல் நிற்க அதிக நேரமாகும். தும்முகிறவர்களையும் சுற்றியிருப்பவர்களையும் வெறுத்துப் போகச் செய்து விடும். இன்னும் பொது இடத்தில், ஒரு கூட்டத்தில் தும்மல் வந்தால் பெரும் அவஸ்தையாகிப் போகும்.
மழையில் நனைவது, தூõசியில் வேலை செய்வது, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இருந்தால்கூட சிலருக்குத் தும்மல் வரும். இந்தக் காரணங்களுக்காக வரும் தும்மல் சீக்கிரம் நின்றுவிடும். உடலுக்கும் கெடுதல் இல்லை.
ஆனால், நுரையீரலில் ஏற்படும் மாற்றத்தினால் சிலருக்கு தும்மல் வரும். அதுதான் தொடர் தும்மலாக இருக்கும். இதனால் உடல் நிலைகூட பலருக்கும் பாதிக்கப்படும்!
சிலருக்கு தும்மல் வந்தால் உயிரே போகும் அளவிற்கு மார்பும் விலா எலும்புகளும் வலிக்கும்.
உடம்பில் எலும்பு முறிவுக்கு சிகிச்சையோ, ஏதாவது நோய்க்கு அறுவை சிகிச்சையோ எடுத்திருந்தவர்களுக்கு தும்மல் வந்தால், பெரும் பிரச்னையாகிவிடும். தும்மினால் ஒட்டி இருக்கும் எலும்போ, அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட தையலோ பிரிந்து போகவும் வாய்ப்பு உண்டு.
சிலருக்குத் தும்மினால் கைகால் அல்லது முதுகு பிடித்துக் கொள்ளும். அந்த வலி வந்தவர்களுக்குத்தான் தெரியும். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தும்மல் வந்தால் கேட்கவே வேண்டாம். அவஸ்தைதான்.
இதில் இனனொரு வேடிக்கை, வந்த தும்மலை அடக்கக் கூடாது என்பதுதான். பிறகு என்னதான் செய்வது? தும்மலின் வேகத்தை குறைக்க வழி செய்ய வேண்டுமே தவிர அடக்கக் கூடாது. வந்த தும்மலை அட்கினால் நுரையீரல் பாதிப்பு வரும். கர்ச்சீஃப் அல்லது துண்டால் வாயை லேசாக மூடிக் கொண்டு மூக்கால் மெதுவாக தும்ம முயற்சி செய்யுங்கள்.
இனிதான் நீங்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த தும்மல் வரப்போகிறது என்று உணர்ந்தால் தும்மல் வருவதற்குள் அதைத் தடுக்க முயற்சிக்கலாம்.
எப்படி?
1. கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் கிடுக்கி போல் நுனி மூக்கைப் பிடித்து லேசாக ஆட்டுங்கள். தும்மல் வராது.
2. வாயை கர்ச்சீஃபால் மூடிக்கொண்டு மூக்கின் வழியாக காற்றை வேகமாக வெளியேற்ற முயற்சி செய்யுங்கள்.
3. இரண்டு கண்களுக்கு இடையில் உள்ள முன் நெற்றியை மெதுவாகத் தட்டிக் கொண்டே இருங்கள்.
4. வாயில் காற்றை ஊதி ஊதி வெளியே தள்ளப்பாருங்கள்.
5. கர்ச்சீஃப், துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரால் வாயை மூடியபடி தும்மினால் அதன் அளவு குறையும்.
6. எந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளங்கையை குவித்து மூக்குக்கும் வாய்க்கும் இடையில் வைத்துத் தும்மாதீர்கள். அது உள்ளங்கையில் கிருமிகளைத் தங்க வைக்கும்.
7. வீட்டில் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பைப் போட்டு மூக்கைக் கழுவுங்கள்.
8. வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அதை தூரமாக இருக்க வையுங்கள். தும்மலுக்க செல்லப் பிராணிகளும் காரணமாக இருக்கலாம்.
9. ஆவி பிடிப்பது சிலருக்கு தும்மலைத் தடுக்கும். வேப்பிலையுடன் மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது நல்லது.
10. தூசு அலர்ஜி உள்ளவர்கள், தூசு அதிகள் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். வீட்டில் தூசு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
11. ஏ.சி. காற்று நேராக முகத்தில் படும்படி அமராதீர்கள்.
12. பட்டாசுப் புகை, வாகனப் புகையை சுவாசிப்பதிலிருந்து தற்காத்தாலே தும்மல் வராமல் காக்க முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக எதிரில் யாராவது இருந்தால், எழுந்து வெளியில் போய் தும்முங்கள். அல்லது திரும்பி நின்று கர்ச்சீஃபால் வாயையும் மூக்கையும் பொத்தியபடி மெதுவாகத் தும்முங்கள். அது பலவகையில் நோய் பரவாமல் தடுக்க உதவும். மற்றபடி தும்மல் என்பது நோயல்ல. அது ஒரு எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.