வீட்டில் எப்படி பகவானுக்கு நித்ய பூஜை எளிமையாக செய்வது |
எல்லோருக்கும் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்
பூஜை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் இந்த கலியுகத்தில் வேலை வேலை என்று தினமும் நமக்கு நேரம் இருக்காது.
மாற்றங்கள் அதிகமாக இருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம்.
காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தாலும், நம்மை படைத்த பரமாத்மாவுக்காக ஒரு 15 நிமிடமாவது ஒதுக்கி எளிய முறையில் பூஜை செய்வதும் நம் கடமை அல்லவா.
கடவுளை நம் வீட்டில் முறையாக வணங்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் காணாலாம்.
முதலில் நாம் பூஜை அறையை வாரம் இரண்டு முறை கண்டிப்பாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
முதல் நாள் நாம் இறைவனுக்கு பூஜை செய்திருப்போம் அல்லவா?
அந்த பழைய பூக்கள், பழைய ஊதுபத்தி சாம்பல் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்து மற்றவர்கள் மிதிக்காத இடத்தில் போட வேண்டும்.
பூஜை அறையை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
பூஜை சாமான்களை ரெடியாக வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் விளக்கு ஏற்ற வேண்டும்.
பின் அபிஷேகம்
கோவிலில் செய்வது போன்ற அபிஷேகம் நம் வீட்டில் தினசரி இறைவனுக்கு செய்வது என்பது சாத்தியமில்லை.
அப்படி செய்ய முடியும் ஆனால் மனதில் உறுதி வைராக்கியம் வேண்டும்.
ஆகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூவால் எடுத்து இறைவனின் பாதத்தில் இரண்டு சொட்டு சமர்ப்பிக்கலாம்.
பூஜை ஸ்டோர்ஸ்களில் மந்திர புத்தகங்கள் நிறைய கிடைக்கும்.
முதன்முதலில் ஸ்லோகம் படிப்பவர்கள் படிப்பதற்கு முன் குரு உபதேசம் பெற்று பாராயணம் செய்தால் மிகவும் நல்லது.
உங்கள் வீட்டில் ஸ்வாமி படங்கள் அதிகமாக உள்ளது என்றால் பொதுவாக இரண்டு சொட்டு நீரை மட்டும் பாத்திரத்தில் விட்டு சமர்ப்பயாமி என்று கூறிவிட்டு அபிஷேகத்தை முடித்து விடலாம்.
இதற்காக நீங்கள் பயன்படுத்தும் நீரானது தூய்மையாக இருக்கவேண்டும்.
உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால் உபயோகிக்கலாம்.
பூக்கள்
இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள் தான்.
அந்ததந்த இறைவனுக்கு என்று சிறப்புகள் கொண்ட பூக்கள் உண்டு.
ஆனால் அந்த பூக்களை எல்லாம் நம்மால் தினசரி வாங்க முடியாது.
நமக்கு தினசரி என்ன மலர் கிடைக்கின்றதோ அதனை வைத்து இறைவனை பூஜிக்கலாம்.
ஆனால் அந்த மலர்களை நாம் இறைவனுக்கு வைக்கும் பொழுது அந்த இறைவனின் நாமத்தை கூறி பூஜை செய்வது சிறந்தது அதாவது அஷ்டோத்திரம்.
ஒருவேளை உங்கள் ஊரில் பூக்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம்.
வீட்டில் அரிசி இருக்கிறது அல்லவா அதையும் கொஞ்சம் மஞ்சள்தூளையும் சேர்த்து அஷதையை புஷ்பமாக பயன்படுத்தலாம்.
குறைந்த பட்சமாக நம் இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தின் நமக்கு தெரிந்த மந்திரங்களை கூறி நாம் இறைவனை வழிபடலாம்.
மந்திரம் என்றால் கடினமானது அல்ல.
நீங்கள் விநாயகரை வழிபட வேண்டும் என்றால், ஓம் மஹா கணபதயே நமஹ
என்றும்
மஹாவிஷ்ணுவுக்கு ஓம் நமோ நாராயணாய என்றும்
சிவனுக்கு ஓம் நமசிவாய என்றும்
முருகனை வழிபட வேண்டும் என்றால் ஓம் சரவணபவாய நமஹ என்றும்
துர்கை அம்மனை வழிபட வேண்டும் என்றால் ஓம் துர்கா தேவ்யை நமஹ என்று கூறினாலும் போதும்.
உங்களுக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும்.
தூபம்
சாம்பிராணி புகை போடுவது தான் தூபம் என்பார்கள்.
இந்த தூபத்திலிருந்து வரும் புகையை நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுவதும் காட்டலாம்.
உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்கான வசதி இல்லையென்றால், நல்ல வாசனை உள்ள ஊதுவத்தியை பயன்படுத்தி பூஜை செய்யலாம்.
பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, தூபமாக இருந்தாலும் சரி அதை வலமாகத்தான் சுற்றி பூஜை செய்ய வேண்டும்.
இப்படி பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.
தீபம்
நெய் தீபம் ஏற்றி அதனை நம் கைகளால் எடுத்து இறைவனை நோக்கி மூன்று முறை வலப்புறமாக சுற்ற வேண்டும்.
இப்படி நாம் செய்யும் பொழுது இறைவனை மனதார நினைத்து கொள்ள வேண்டும்.
தூபம் காட்டிய பிறகு தீபம் கட்டாயமாக காட்டப்பட வேண்டும்.
நிவேதனம்
நைய்வேத்யம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதனை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம்.
பூஜை அறையில் படங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல்
நைவேத்யம் வைக்க வேண்டும்.
நாம் இறைவனுக்கு நைவேத்யத்தை படைக்கும் பொழுது, பூவினால் ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அந்த நைவேதியத்தை மூன்று முறை சுற்றி அதனை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மங்கள ஆராத்தி
சிலர் வீடுகளில் கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இருக்காது.
கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இல்லாதவர்கள் நெய்தீப ஆரத்தி காட்டுவதுடன் பூஜையை முடித்துக் கொள்ளலாம்.
பூஜை முடியும் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை நீங்கள் இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம்.
தீப ஆராதனையை நம் கைகளால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
கடைசியாக சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான்
இதற்கு ஒரு 15 நிமிடங்கள் வரை ஆகலாம்.
தீபம் முழுமையாக எறிந்து முடியும் வரை நாம் அதனைப் பூர்த்தி செய்யக் கூடாது. அது தானாகவே தான் குளிர வேண்டும்.
இந்த பூஜையின் கடைசி கட்டமாக நாம் இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடி
ஸ்வாமி என்னால் முடிந்த அளவு உங்களுக்கு பூஜை செய்துள்ளேன்
இதில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்தால் என்னை மன்னித்தருள வேண்டும்.” என்று இறைவனிடம் கேட்டுக் கொள்ளவேண்டும்.
இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
நாம் இந்த பூஜையைச் செய்வது மட்டுமல்லாமல், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் தெய்வீக வழிபாட்டை சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் நம் வீட்டு பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் தலையாய கடமையாகும்.