ஒற்றுமை கவிதைகள் |
ஒற்றுமை கவிதைகள்
சாதி மதத்தை மறந்து
ஒரே குலம் என்றிரு
இந்தியன் என்று ஒன்றுபட்டு
உலகம் நெகிழ நடந்திடு
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இல்லையேல் அனைவரும் தாழ்வு"
என்ற பாரதியின் கனவை நனவாக்கு.
ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்
ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
மறப்பின் வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
கருதி நடப்பின் சேதமிலை
சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
ஆய்ந்தால் அறிவீர் பாதிலென
மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
பரவா வழிதனை நாடுங்கள்
உலக மெங்கும் போராட்டம்-பெரும்
ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
அஞ்சிட காலம் கடக்கிறதே